டோஹா: உலக அளவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19 பரவலுக்கு முன்பு இருந்த நிலையில் 83 விழுக்காட்டை இவ்வாண்டு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023ல் அந்த எண்ணிக்கை தொற்றுப் பரவலுக்கு முன்பிருந்த அளவைவிட அதிகமாக உயரும் என்று அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கம் கூறியுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு விமானத் துறை மூன்று ஆண்டு களுக்குப் பிறகு லாபத்தை எட்டும் நிலையில் உள்ளதாக அச்சங்கம் கூறியது.
2022ஆம் ஆண்டுக்கான விமானத் துறையின் முன்னுரைப்பை உயர்த்திப் பேசிய சங்கத்தின் தலைமை இயக்குநர் வில்லி வால்ஷ், மக்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் விமானப் பயணம் மேற்கொள்வதாகக் கூறினார். பொருளியல் குழப்பம் அதிகரித்தபோதும், சரக்குகளும் தொடர்ந்து அதிக அளவில் அனுப்பப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2020ல் விமானப் பயணி களின் எண்ணிக்கை 60 விழுக்காடு குறைந்தது. 2021ல் அது சற்றேதான் கூடியது. கடந்த ஈராண்டுகளில் மட்டும் விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 200 பில்லியன் அமெரிக்க டாலரை (S$227 பி.) இழந்தன.
சில விமான நிறுவனங்கள் நொடித்துப் போயின. பெரும் பாலும் அரசாங்க ஆதரவுபெற்றவை தப்பிப் பிழைத்தன.
சென்ற 2021ஆம் ஆண்டு 42 பில்லியன் டாலரை இழந்த நிறுவனங்களுக்கு இவ்வாண்டு 9.7 பில்லியன் டாலர் இழப்பு மட்டுமே ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஏற்கெனவே முன்னுரைக்கப்பட்ட 11.6 பில்லியன் டாலர் இழப்பைவிட குறைவு.
கொவிட்-19 பரவலால் சீனா முடங்கி உள்ள நிலையில் ஆசியாவில் உள்ள விமான நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள நிறுவனங்களுக்கு 8.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்காதான் ஆகச் சிறப்பாக மீட்சி அடைந்துள்ளது.
இருப்பினும் எண்ணெய் விலை, பணவீக்கம் ஆகியவற்றின் உயர்வு, விமானத் துறை மீட்சியைப் பாதிக்கும் என்ற அச்சம் உள்ளது.
இரண்டு ஆண்டுத் தேக்கத்துக்கு பிறகு விமானப் பயணங்கள் அதிகரித்துள்ளதால், கட்டணங்களும் அதிகம் உயர்ந்துள்ளன.
இதனால் கோடைகாலத்துக்குப் பிறகு விமானப் பயணங்கள் மீண்டும் வெகுவாகக் குறையலாம் என்ற அச்சமும் உள்ளது. ஆனால் திரு வால்ஷ் விமானப் பயணங் களுக்கான தேவை தொடர்ந்து உயரும் என்று கூறினார்.