பெங்களூரு: இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐந்தாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
அதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அந்தப் போட்டித் தொடர் சமநிலையில் முடிந்தது.
ஐந்தாவது 20 ஓவர் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி விளையாட்டரங்கத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி இந்திய அணி களம் இறங்கி பந்தடிக்க இருந்த நிலையில், மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மழை நின்றவுடன் போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கியது.
களம் இறங்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 15 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கெய்க்வாட் 10 ரன்னுடன் வெளியேறினார். இந்திய அணி 3.3 ஒவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி பாதிக்கப்பட்டது.
மழை நிற்காததால், போட்டி கைவிடப்படுவதாக இந்தியாவின் பிசிசிஐ அமைப்பு அறிவித்தது.
இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். போட்டிக்கான கட்டணத்தில் 50 விழுக்காடு ரசிகர்களுக்கு திருப்பித் தரப்படும் என்று கர்நாடக கிரிக்கெட் சங்கம் அறிவித்தது.

