பெய்ஜிங்: சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. ஆறுகளில் நீர் கரைபுரண்டதாலும் வரலாறு காணாத அளவில் நீர் சேர்ந்ததாலும் இந்நிலை உருவாகியுள்ளது.
அதனால் மக்கள் பலர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற நேரிட்டதாக உள்ளூர் அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன.
குவாங்டோங் மாநிலத்தின் ஷாவ்குவான் நகரில் சென்ற மாத இறுதியிலிருந்து இதுவரை காணாத அளவு மழை பெய்துள்ளது. அங்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஆக உயரிய அளவுக்கு அதிகரிக்கப்பட்டது.
உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு ஆறுகளுக்கு அருகிலும் தாழ்வான பகுதிகளிலும் வசிப்போரை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
ஜியாங்சீ மாநிலத்திலும் வெள்ள அபாய எச்சரிக்கை உயர்த்தப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அங்கு ஒன்பது வட்டாரங்களில் வசிக்கும் 485,000 பேர் பாதிக்கப்பட்டனர். சின்ஹுவா மேல்விவரம் ஏதும் தரவில்லை.
இந்த மாதத் தொடக்கத்தில் சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் பெய்த தொடர் மழையால் குறைந்தது 21 பேர் மாண்டனர்.

