புத்ரா ஜெயா: விலைவாசி உயர்வைச் சமாளிக்க மலேசியா இந்த மாத இறுதியிலிருந்து வசதி குறைந்த குடும்பங்களுக்கு 630 மில்லியன் ரிங்கிட் கூடுதல் உதவியை அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவினமும் அண்மையில் உணவு விலைகளும் உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அந்த முடிவுக்கு வந்ததாக பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். நேற்று தொலைக்காட்சியில் நேரடியாக பேசியபோது அவர் இதை அறிவித்தார்.
மலேசிய வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட குடும்ப உதவித் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக இக்கூடுதல் உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்வழி, மலேசியா இவ்வாண்டு ஒட்டுமொத்தமாக வசதிகுறைந்தோருக்கு 1.74 பில்லியன் ரிங்கிட் நிதி உதவி வழங்கும்.
சுமார் 4 மில்லியன் குடும்பங்களும் 4.6 மில்லியன் தனிநபர்களும் இதனால் பயன்பெறுவர் என்றார் திரு இஸ்மாயில்.
வரும் திங்கட்கிழமையிலிருந்து அத்தொகை வழங்கப்படும்.
மேலும், சமையல் எண்ணெய் மானியத்தை அகற்றப்பட்டபோதும், ஒரு கிலோகிராம் பொட்டலங்களில் உள்ள சமையல் எண்ணெய்க்கான மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் திரு இஸ்மாயில் கூறினார்.