கொழும்பு: இலங்கைப் பொருளியல் முற்றிலும் சரிந்துள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். எரிவாயு, மின்சாரம், உணவுத் தட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையை நாடு எதிர்நோக்கு வதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
சிலோன் பெட்ரோலிய நிறுவனம் தற்போது 700 மில்லியன் டாலர் கடனில் உள்ளது. எண்ணெய் வாங்கி இறக்குமதி செய்வதற்கு இலங்கையிடம் பணம் இல்லை என்றும் எந்த நாடும் இலங்கைக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஆயத்தமாக இல்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் வெளிநாட்டு நாணய இருப்பு கரைந்துகொண்டிருந்தபோது, அரசாங்கம் உரிய நேரத்தில் நிலைமையை சரிசெய்யத் தவறிவிட்டதாக நிதி அமைச்சருமான திரு ரணில் குறிப்பிட்டார்.
பொருளியலைத் தூக்கி நிறுத்த இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை இலங்கை கொடையாளர் மாநாட்டுக்கு அழைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கூடுதல் கடன் உதவி வழங்குவது பற்றி கலந்துரையாட உயர்மட்ட இந்தியக் குழு இன்று கொழும்பு வருகிறது.
பொருளியலை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக சூதாட்டக் கூடங்களை நடத்தி வந்த செல்வந்தர் தம்மிக்கா பெரேரா நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். முதலீட்டு மேம்பாட்டுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டு அவர் விரைவில் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்.
அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ஆதரவாளரான திரு பெரேரா மீது திரு ரணில் முன்பு ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார்.