லண்டன்: பிரிட்டனில் 40 ஆண்டு களாக இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்திருந்திருக்கிறது.
பணவீக்கம் வரும் மாதங்களில் மேலும் உயரும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
பிரிட்டனில் கடந்த மே மாதம் பணவீக்கம் 9.1 விழுக்காடு உயர்ந்தது. கடந்த 1982க்குப் பிறகு அங்கு இந்த அளவுக்கு பணவீக்கம் கூடியதில்லை. ஒப்புநோக்க ஏப்ரலில் நாட்டில் பணவீக்கம் 9 விழுக்காடு உயர்ந்திருந்தது.
மே மாதத்தில் இந்த அளவு பணவீக்கம் கூடியதற்கு உணவு விலை உயர்வு முக்கியக் காரணம் என்று பிரிட்டிஷ் புள்ளிவிவர அலுவலகம் நேற்று தெரிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அந்தநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.
பிரிட்டனில் இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டும் என்று பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்துள்ளனர்.
விலைவாசி தொடர்ந்து உயரும் இந்நிலையில் சம்பள உயர்வு பெறாவிட்டால் வேலை நிறுத்தம் செய்யக்கூடும் என்று பிரிட்டிஷ் ஆசிரியர்களும் அஞ்சல்துறை ஊழியர்களும் எச்சரித்துள்ளனர். வேலை நிறுத்தம் செய்வது பற்றி அவர் களது தொழிற்சங்கங்கள் தனித் தனியே வாக்கெடுப்பை நடத்தும்.
ஏற்கெனவே சுமார் 40,000 பிரிட்டிஷ் ரயில்வே ஊழியர்கள் நேற்றுமுன்தினம் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர். பிரிட்டனில் 30 ஆண்டுக்குப் பிறகு நடக்கும் ஆகப் பெரிய வேலை நிறுத்தத்தில் பல மில்லியன் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
தொழிற்சங்கங்களை இதில் வெல்ல அனுமதிக்கக்கூடாது என்றும் சம்பள உயர்வு பணவீக்க கட்டுக்கடங்காமல் உயரச் செய்யும் என்றும் துணைப் பிரதமர் டோமினிக் ராப் எச்சரித்தார்.

