ஷரன் (ஆப்கானிஸ்தான்): நிலநடுக்கத்தால் அவதிக்கு உள்ளாகியிருக்கும் ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதி ஒன்றில் நேற்று முதல் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், சரியான தொடர்புகள் இல்லாதது, ஒழுங்கான சாலைகள் போடப்படாதது ஆகிய காரணங்களால் நிவாரணப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானை உலுக்கியது. குறைந்தது 1,000 பேர் மரணம்அடைந்தனர். சுமார் 1,500 பேர் காயமடைந்தனர். 3,000க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.
தனது உலக உணவுத் திட்டத்தின்கீழ் உணவு மற்றும் தளவாடங்களை ஆப்கானிஸ்தானின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்தது. முதலில் 3,000 குடும்பங்களுக்கு உதவுவது இலக்கு.
அதிகமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் அறிக்கை ஒன்றில் கூறினார். ஐரோப்பிய ஒன்றியமும் உடனடியாக உதவி வழங்கப்போவதாகத் தெரிவித்தது.
ஜப்பான், தென்கொரியா, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகியவையும் உதவி வழங்க முன்வந்துள்ளன.
தனது அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கு உதவியையும் ஆதரவையும் வழங்க இந்தியா உறுதியுடன் இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: ஜப்பான், தென்கொரியா உள்ளிட்டவை உதவ முன்வந்துள்ளன

