யங்கூன்: வீட்டுக் காவலில் இருந்து வந்த மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகர் நேப்பிடோவில் உள்ள சிறையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மியன்மாரின் ராணுவ அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மியன்மாரில் சென்ற ஆண்டு ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதற்குப் பிறகு 77 வயது திருவாட்டி சூச்சி நேப்பிடோவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு வந்தார். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட இடத்தின் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஊழல், ராணுவத்திற்கு எதிராக வெறுப்பைத் தூண்டியது உள்ளிட்டவற்றின் தொடர்பில் திருவாட்டி சூச்சி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இதுவரை அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் முன்னதாக ராணுவம் ஆட்சியில் இருந்தபோது திருவாட்டி சூச்சி பலமுறை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

