பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூர் உள்ளிட்ட தான் இழந்த பகுதிகளை மலேசியா மீட்டுக்கொள்ளவேண்டும் என்று தாம் கூறவில்லை என்று முன்னாள் மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கியுள்ளார். பெட்ரா பிராங்கா தீவை இழந்ததைப் பற்றியே தாம் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
"மேசை அளவில் உள்ள பாறையை இழந்ததை நினைத்து மலேசியா வருத்தப்படுகிறது, ஆனால் இழந்த பெரிய பகுதிகளைக் கருதி அது அக்கறை கொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டினேன்," என்று 96 வயது திரு மகாதீர் குறிப்பிட்டார். பெட்ரா பிராங்கா தீவை இழந்ததை எண்ணி மலேசியா அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.
தாம் தெரிவித்திருந்த கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.