யோக்யகார்த்தா (இந்தோனீசியா): உக்ரேன் போரால் நிலவும் உணவுப் பற்றாக்குறை உலகில் மில்லியன் கணக்கானோரைப் பலிவாங்கக்கூடும் என்று முக்கிய உதவி அமைப்பின் ஒன்றின் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மக்கள் கொள்ளைநோய்களுக்கு ஆளாகலாம் என்றும் அது உலகின் அடுத்த சுகாதார நெருக்கடியை உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார்.
உக்ரேன், உலகில் கோதுமை, சோளம் ஆகியவற்றை நான்காவது ஆக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு.
அந்நாட்டின் கருங்கடல் துறைமுகங்களை ரஷ்யாவின் கடற்படைகள் முடக்கிவிட்டன.
அதைத் தொடர்ந்து குறைந்த வருமான நாடுகளில் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் அவற்றில் பலர் பசியில் வாடுகின்றனர்.
உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் பலர் பசியால் மட்டும் இறக்கமாட்டார்கள். போதுமான ஊட்டச்சத்து இல்லாததால் அவர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் அவர்கள் கொள்ளைநோய்களுக்கு ஆளாகியும் உயிரிழக்கலாம் என்று எய்ட்ஸ், காசநோய், மலேரியா ஆகிய நோய்களுக்கான உலக நிதியத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டர் சேண்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளின் அரசாங்கங்கள் வறுமையால் ஆக அதிகமாக வாடும் சமூகத்தினருக்கு முதல்நிலை சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளை வழங்கி உணவுப் பற்றாக்குறையின் தாக்கத்தைக் குறைக்கவேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் வங்கி அதிகாரியான திரு சேண்ட்ஸ் சொன்னார்.
"கொள்ளைநோய்கள், உணவுப் பற்றாக்குறை, எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றின் ஒட்டுமொத்த தாக்கத்தால் கூடுதலாக மில்லியன் கணக்கானோர் இறக்கலாம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்.