வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை துப்பாக்கிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் முதல்முறையாக இத்தகைய குறிப்பிடத்தக்க சட்டம் அங்கு நடப்புக்கு வரவிருக்கிறது.
மக்களவையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 14 பேரும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் என மொத்தம் 234 பேர் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்; இதனை எதிர்த்து 193 வாக்குகள் பதிவாயின.
இனி அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்ட பிறகு மசோதா சட்ட அங்கீகாரம் பெறும்.
புதிய சட்டத்தின்கீழ் இளையர்கள் துப்பாக்கி வாங்குவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மிரட்டலாகக் கருதப்படுவோரிடமிருந்து துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்ய மாநில அரசாங்கங்களை இது ஊக்குவிக்கும்.
முன்னதாக சென்ற வியாழக்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை உறுப்பினர்கள் 65 பேர் இந்த மசோதாவிற்கு ஆதரவாகவும் 33 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். ஆதரவாக வாக்களித்தோரில் 15 பேர் குடியரசுக் கட்சி செனட்டர்கள்.
இதனையடுத்துப் பேசிய அதிபர் பைடன், " இந்தச் சட்டம் அமெரிக்கர்களைப் பாதுகாக்கும்; பள்ளிக் குழந்தைகளுக்கும் சமூகத்தினருக்கும் பாதுகாப்பு தரக்கூடிய இந்த மசோதாவிற்கு மக்களவையும் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் 20,800க்கும் அதிகமானோர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததாக 'கன் வயலன்ஸ் ஆர்க்கைவ்' எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கூறுகிறது.
புதிய சட்டத்திற்கு குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என இருதரப்பின் ஆதரவும் கிடைத்திருப்பது முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

