கோலாலம்பூர்: மியன்மாரில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி பின்னர் மோசடிக் கும்பலுக்கு வேலைபார்க்க வலியுறுத்தப்பட்ட மலேசியச் சிறுவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
பாகாங் மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கும் முறையே 14, 15 வயது என்று தெரிவிக்கப்பட்டது.
'ஃபேஸ்புக்', 'இன்ஸ்டகிராம்' ஆகியவற்றில் வெளியான விளம்பரங்கள் மாதச் சம்பளமாக 5,000 மற்றும் 7,000 ரிங்கிட்டுகள் தரப்படும் என்று கூறியதை நம்பி மியன்மார் சென்றதாகவும் ஆனால் தாங்கள் காதல் மோசடியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாகவும் சிறுவர்கள் கூறினர்.
"இவ்வாறு பலர் மோசடிக்காரர்களிடம் பிடிபட்டுள்ளனர். நிர்ணயித்த இலக்குகளை எட்ட இயலாதோரை அவர்கள் கொடுமைப்படுத்தினர்.
"நாங்களும் இலக்கை எட்டவில்லை; ஆனாலும் எங்களை விட்டுவிடும்படி அவர்களிடம் கெஞ்சினோம்," என்றும் இவர்கள் குறிப்பிட்டனர்.
மோசடிக்காரர்கள் பின்னர் சிறுவர்களை விடுவிக்க இவர்கள் குடும்பத்தினரைப் பணம் கேட்டு மிரட்டியதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு வெளிநாட்டு மோசடிக் கும்பல்களிடம் சிக்கிய 63 ஆண்கள், 15 பெண்கள் குறித்துப் புகார் செய்யப்்பட்டிருப்பதாகவும் இவர்களில் 15 பேர் நாடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு வேலைகளை ஏற்றுக்கொள்ளும்போது மலேசியர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.