வாஷிங்டன்: அனைத்துலகப் பண நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா, அமெரிக்கா பொருளியல் மந்தத்தைத் தவிர்ப்பதற்கான சாத்தியங்கள் குறைந்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
பணவீக்க விகிதம் அதிகரிப்பதையும், நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியிருப்பதையும் அவர் சுட்டினார்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்ட பொருளியல் பாதிப்புகளில் இருந்து வலுவாக மீண்டு வந்தாலும் விலைவாசி உயர்வால் விரும்பத்தகாத பின்விளைவுகள் ஏற்பட்டிருப்பதாகத் திருவாட்டி ஜார்ஜிவா கூறினார்.
வட்டி விகித உயர்வு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்று நிதியம் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், அதேநேரத்தில் பொருளியல் மந்தநிலையைத் தவிர்ப்பதற்கான பாதை குறுகிவருவதாகச் சொன்னார்.

