இலங்கையில் எரிபொருள் வறட்சி; விலை கூடியது

இலங்கையில் எரிபொருள் வறட்சி; விலை கூடியது

1 mins read
ed5a017a-c3a1-4fe4-93c1-5bc94a47dfcf
இலங்கை தலைநகர் கொழும்பில் சென்ற வாரம் பெட்ரோலுக்காகவும் டீசலுக்காகவும் வரிசையில் நினற் வாகனங்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

எரிபொருள் இருப்பு இல்லாத நிலையை எட்டிவிட்ட இலங்கை, கைவசம் உள்ள சிறிதளவு டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது.

அதேநேரத்தில் இலங்கையின் பொருளியல் நெருக்கடியைத் தணிக்கும் நோக்குடன் அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டிற்கு வந்து சேர்ந்தது.

இலங்கையில் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் டீசல் பயன்படுத்தப்படுகிறது.

டீசல் விலையை 15 விழுக்காடு அதிகரித்து ஒரு லிட்டரின் விலையை ரூ.460 (S$1.78) ஆக சிலோன் பெட்ரோலிய கழகம் உயர்த்தியது.

அதேவேளையில், பெட்ரோல் விலை 22 விழுக்காடு கூடி லிட்டருக்கு ரூ.550 (S$2.12) ஆனது.

வெளிநாட்டிலிருந்து அடுத்ததாக எப்போது எண்ணெய் வரும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லை என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகரா ஓரிரு நாட்களுக்கு முன்புதான் கூறியிருந்தார்.

இதற்காக அவர் வாகன உரிமையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு பெட்ரோல் நிலையங்களில் வரிசைப்பிடித்து நிற்கவேண்டாம் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

எண்ணெய் வந்ததும் நிரப்பிக் கொள்ளலாம் என்று பலரும் தங்கள் வாகனங்களை பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிறுத்திவிட்டு போய்விட்டார்கள்.