கோலாலம்பூர்: அதிகரிக்கும் விலைவாசியால் அவதியுறும் மலேசியர்களுக்கு உதவும் வகையில் ஏறத்தாழ 77.3 பில்லியன் ரிங்கிட் ($24.4 பில்லியன்) மானியம் வழங்கப்படும் என்று மலேசியாவின் நிதி அமைச்சர் துங்கு ஸஃப்ருல் அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார்.
இதுவரை எந்த ஒரு மலேசிய அரசாங்கமும் இத்தகைய பெரும் தொகையை மானியமாக வழங்கியதில்லை என்றார் அவர்.
பெட்ரோல், டீசல், சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய், மாவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்படும் செலவினத்தைச் சமாளிக்க இந்த நிதி கைகொடுக்கும் என்றார் திரு ஸஃப்ருல்.
"சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைச் சேர்த்துக்கொண்டால் தற்போதைய நிலவரப்படி இவ்வாண்டு ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 77.3 பில்லியன் ரிங்கிட் மானியத் தொகை வழங்கப்படுகிறது," என்று திரு ஸஃப்ருல் தெரிவித்தார்.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்காக அண்மையில் கூடுதலாக 630 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இப்பிரிவினருக்கு வழங்கப்படும் மானியம் 1.74 பில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவும் ஒட்டுமொத்த மானியத் தொகையில் அடங்கும் என்றார் அமைச்சர் ஸஃப்ருல்.
இவ்வாண்டின் பிற்பகுதியில் மலேசியர்களின் மின்சாரக் கட்டணம் உயராமல் இருக்க 5.8 பில்லியன் மானியத் தொகை நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
உக்ரேன்-ரஷ்யா போர் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலி வெகுவாகப் பாதிப்படைந்திருப்பதால் பணவீக்கமும் விலைவாசியும் அதிகரித்திருப்பதைச் சுட்டிய திரு ஸஃப்ருல், மலேசியர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சுமையைக் குறைக்க அனைத்து வகை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
"வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளால் மலேசியாவில் விலைவாசி அதிகரிக்கிறது. மலேசியாவின் பொருளியலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய சூழல்களை நிதி அமைச்சு தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கும். மலேசியர்களின் வாழ்க்கைச் செலவினம் கட்டுக்குள் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும்," என்று திரு ஸஃப்ருல் கூறினார்.

