காபூல்: அண்மையில் ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 1,000 பேர் மாண்டனர். கிட்டத்தட்ட 2,000 பேர் காயமுற்றனர். நிலநடுக்கம் காரணமாக ஏறத்தாழ 10,000 வீடுகள் தரைமட்டமாகின.
ஆனால் பிரச்சினை அத்துடன் முடிந்துவிடவில்லை என்று ஐநாவின் மனிதாபிமான விவகாரங்கள் பிரிவு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.
நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தோரிடையே 'காலரா' எனப்படும் வாந்தி, பேதி நோய் பரவும்
அபாயம் இருப்பதாக அது கவலை தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பலரின்
உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அது கூறியது.
பாதிக்கப்பட்டோருக்கு உணவும் சுத்தமான தண்ணீரும் தேவைப்
படுவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறு
வனத்திடம் ஆப்கானிஸ்தான் சுகாதார அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஷராஃபத் ஸமான் தெரிவித்தார். காயமுற்றவர்களுக்கு ஒருவழியாக மருந்து வழங்கி தற்போதைக்குச் சமாளித்துவிட்டதாக அவர் கூறினார்.
ஆனால் வீடுகளை இழந்தோருக்கு கைகொடுப்பது சவால்மிக்கதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"உயிர்பிழைத்தோருக்குத் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை வழங்க எங்களுக்கு உதவு மாறு அனைத்துலகச் சமூகத்தினரையும் மனிதாபிமான அமைப்பு
களையும் கேட்டுக்கொள்கிறோம். முறையான வசிப்பிடங்கள் இல்லாததால் அவர்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது," என்று திரு ஷராஃபத் கூறினார்.
பாதிப்படைந்தோருக்கு உதவும் நோக்கில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஐநாவும் பல நாடுகளும் அனுப்பிவைத்துள்ளன. இவை அடுத்த சில நாள்களில் பாதிப்
படைந்தோரைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.