அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரில் யாரும் கவனிக்காமல் விட்டுச்செல்லப்பட்ட லாரியில் குறைந்தது 46 குடியேறிகள் மாண்டுகிடந்தனர்.
கடந்த திங்கட்கிழமையன்று (27 ஜூன்) காவல்துறையினர் லாரியைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர்.
அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் ஆள் கடத்தலில் ஈடுபடுவோரால் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஏறத்தாழ 16 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
கடுமையான வெப்பம், சோர்வு ஆகியவற்றால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் நான்கு சிறுவர்களும் அடங்குவர்.
இச்சம்பவம் தொடர்பாக மூவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியேறிகள் மூச்சுத்திணறி மாண்ட இச்சம்பவம் மீளாத் துயரத்தைத் தருவதாக மெக்சிகோவின் வெளியுறவு அமைச்சர் மார்சேலோ எப்ரார்ட் டுவிட்டரில் பதிவிட்டார்.
பாதிக்கப்பட்ட குடியேறிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அமெரிக்க அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.