பேங்காக்: தாய்லாந்துக்கு இவ்வாண்டு இதுவரை 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப்பயணிகள் சென்று வந்துள்ளனர்.
இவ்வாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 26ஆம் தேதி வரையிலான ஆறு மாத கட்டத்தில் 2.03 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு வந்ததாக துணை அரசாங்க பேச்சாளர் ஒருவர் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தியா, மலேசியா, பிரிட்டன், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பட்டியலில் முதல் ஐந்து நிலைகளில் வந்ததாக அவர் கூறினார்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்த தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை, ஜூலை 1ஆம் தேதிமுதல் பயணம் தொடர்பான சில விதிமுறைகளைத் தளர்த்துகிறது. பயணத்திற்கு முந்தைய பதிவும் கட்டாய மருத்துவக் காப்புறுதியும் இனி தேவை இருக்கமாட்டா.
இதனால், தாய்லாந்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1.5 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு 7.5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்க தாய்லாந்தின் சுற்றுப்பயண, விளையாட்டுத்துறை அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சீனாவின் கடுமையான கொவிட்-19 விதிமுறைகள் காரணமாக அந்த நாட்டிலிருந்து தாய்லாந்துக்கு வருவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்பதையும் உக்ரேனில் நிலவிவரும் போரையும் அமைச்சு கருத்தில் கொண்டுள்ளது.
2019ல் தாய்லாந்துக்கு வந்த 40 மில்லியன் சுற்றுப்பயணிகளில் சீனப் பயணிகள் கிட்டத்தட்ட 30 விழுக்காடு பங்கு வகித்து இருந்தனர்.

