பெய்ஜிங்: சீனா அதன் கொவிட்-19 தனிமைப்படுத்துதல் விதிமுறையைத் தளர்த்தியுள்ளது. இதனால், சீனா செல்லும் வெளிநாட்டுப் பயணிகள் அங்கு சென்று இறங்கியவுடன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சீனா அதன் கொவிட்-19 கொள்கையில் இதுவரை செய்துள்ள ஆகப்பெரிய மாற்றம் இது.
சீனா சென்று இறங்கியவுடன் அங்கு ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாள்களுக்கு வீட்டில் தங்கள் சுகாதாரத்தைப் பயணிகள் கண்காணிக்க வேண்டும்.
தேசிய சுகாதார ஆணையம் நேற்று வெளியிட்ட அரசாங்க வழிகாட்டி நெறிமுறை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, சீனா சென்றோர் அங்குள்ள ஹோட்டல்களில் 21 நாள்கள் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. என்றாலும், தனிமைக்காலத்தின் கடைசி வாரத்தில் சிலரால் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள முடிந்தது.
தனிமைக்காலத்தில் பரிசோதனை விதிமுறையும் தளர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த வழிகாட்டி நெறிமுறைகள், பயணிகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிடவில்லை.
வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு சீனா தன் எல்லையை இன்னும் முழுமையாகத் திறக்கவில்லை.
இந்நிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலும் நிதி நடுவமான ஷாங்காயிலும் நேற்று முன்தினம் உள்ளூர் அளவில் கொவிட்-19 தொற்று பதிவாகவில்லை. பிப்ரவரி 19ஆம் தேதிக்குப் பிறகு இவ்விரு நகர்களிலும் கிருமிப் பரவல் பதிவாகாதது இதுவே முதன்முறை.
நாடு முழுவதும் 22 பேரிடம் மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

