அம்மான்: ஜோர்தான் நாட்டின் அகாபா துறைமுகத்தில் உள்ள சேமிப்புத் தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் குளோரின் எரிவாயு கசிந்ததில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர்; 251 பேர் காயம் அடைந்தனர் என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்தது.
25 டன் குளோரின் எரிவாயு நிரப்பப்பட்டு இருந்த தொட்டி ஒன்று ஜிபவ்ட்டி நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டபோது எரிவாயு கசிந்ததாக அதிகாரிகள் கூறினர். நேற்று செவ்வாய்க்கிழமைக்குள் ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூறினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அகாபா துறைமுகத்துக்குச் சென்று ஜோர்தான் பிரதமர் பிஷர் அல் கசாவ்னே, மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் நலன் விசாரித்ததாக அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தது. ஏரிவாயு கசிவு குறித்து விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.

