சிங்கப்பூர்: பிரசித்திபெற்ற சைக்கிளோட்டப் போட்டியான டூர் டி பிரான்ஸ், தென்கிழக்காசியாவில் நடத்தப்படுகிறது. இத்தகைய 'கிரைட்டீரியம்' போட்டியை நடத்தும் முதல் ஆசியான் நாடாக சிங்கப்பூர் விளங்கும்.
அக்டோபர் 29, 30ஆம் தேதிகளில் நகரின் மையப் பகுதியில் இந்தப் போட்டி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஆகச் சிறந்த எட்டு சைக்கிளோட்டக் குழுக்களைச் சேர்ந்த 32 சைக்கிளோட்டிகள் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். புகழ்பெற்ற பிரிட்டிஷ் சைக்கிளோட்டியான மார்க் கேவண்டிஷ், அவர்களில் அடங்குவார்.
டூர் டி பிரான்ஸ் போட்டி, ஒவ்வோர் ஆண்டும் பொதுவாக ஜூலை மாதம் பிரான்சில் நடத்தப்படுகிறது. 23 நாள்களில் 21 கட்டங்களாக நடைபெறும் இந்தப் போட்டி, ஏறக்குறைய 3,500 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்குகிறது.
ஒப்புநோக்க, சிறிய அளவில் நடத்தப்படும் கிரைட்டீரியம் போட்டிகள், மற்ற நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகளில் சைக்கிளோட்டிகள் 30 முதல் 90 நிமிடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுற்றுகளை நிறைவேற்ற வேண்டும். ஒவ்வொரு சுற்றின் நீளம் ஏறக்குறைய 800 மீட்டருக்கும் 10 கிலோமீட்டருக்கும் இடைப்பட்டிருக்கும்.
தொழில்முறை வீரர்களும் ஆரம்பநிலை வீரர்களும் பங்கெடுக்கும் இந்த 'கிரைட்டீரியம்' போட்டியை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

