பெட்டாலிங் ஜெயா: கோழிகளின் அதிகபட்ச விலையை மலேசியா கிலோவுக்கு 9.40 ரிங்கிட்டாக ($3) உயர்த்தியுள்ளதாக அந்நாட்டின் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ரோனல்ட் கியான்டீ நேற்று தெரிவித்தார்.
புதிய விலை நாளை முதல் நடப்புக்கு வரும்.
இதற்கு முன்பு மலேசியத் தீபகற்பத்தில் கோழிகளின் விலை கிலோவுக்கு 8.90 ரிங்கிட்டாக இருக்கும் என்று நிர்ணயிக்கப்
பட்டிருந்தது.
இந்த அதிகபட்ச விலை நாளை அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உணவு விலையேற்றம் காரணமாக வர்த்தகங்கள் வெகுவாகப் பாதிப்படைந்ததை அடுத்து, ஜூலை மாதத்திலிருந்து கோழிகள், முட்டைகள் ஆகியவற்றுக்கான அதிகபட்ச விலையை அகற்ற மலேசிய
அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்த ரொக்க உதவித் திட்டத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை அரசாங்கம் எடுத்ததாக டாக்டர் கியான்டீ கூறினார். அந்தத் திட்டத்தின்கீழ் தகுதி பெறும் குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்குத் தலா 500 ரிங்கிட் வழங்கப்படும்.
டாக்டர் கியான்டீயைப் பொறுத்தவரை, இதுவரை ஏறத்தாழ 8.6 மில்லியன் குடும்பங்களுக்கு அந்த ரொக்க உதவித் திட்டத்தை வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மட்டும் தகுதி பெறும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,600 ரிங்கிட் வரை கிடைக்கும் என்றார் அவர்.
"இதற்கு முன்பு எந்த ஒரு மலேசிய அரசாங்கமும் இவ்வளவு பெரிய உதவித் தொகையை வழங்கியதில்லை," என்றார் டாக்டர் கியான்டீ. கோழிகள், முட்டைகள் ஆகியவற்றின் விலை உயர்வை மலேசியர்கள் சமாளிக்க 369.5 மில்லியன் ரிங்கிட் ($117 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மலேசிய அரசாங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதியிலிருந்து மொத்தம் 1.1 பில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள மானியங்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

