பாரிஸ் நகரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம், கொலை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சாலா அப்துசலாம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை காலம் முடியும் முன்னர் சாலாவை சிறையிலிருந்து விடுவிக்கும் சாத்தியம் இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தாக்குதலை மேற்கொள்ள உதவிய மேலும் 19 பேர் குற்றவாளிகள் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றனர்.
2015ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். விளையாட்டு அரங்கம், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், இசை அரங்கம் ஆகிய இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
நீதிமன்ற வழக்கு தொடங்கியதிலிருந்து சாலா தம்மை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் 'போர்வீரர்' என்று அடையாளம் செய்துகொண்டான். அதோடு தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொண்டான்.
கடந்த பத்து மாதங்களாக நீடித்த நீதிமன்ற வழக்கில், தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் தங்களுக்கு நடந்ததை பகிர்ந்துகொண்டனர். நீதி வழங்கப்பட்டிருந்தாலும், இதிலிருந்து மீண்டுவருவது எளிதல்ல என்றனர் அவர்கள்.

