மாஸ்கோ: உக்ரேன் ராணுவத்திற்கு உதவ நேட்டோ சுவீடன், பின்லாந்தில் ராணுவப் கட்டமைப்புகளை அமைத்தல், ராணுவ வீரர்களை குவித்து, அமெரிக்கக் கூட்டணிப் படையுடன் இணைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று எச்சரித்தார்.
"உக்ரேனுடன் எங்களுக்கு இருக்கும் பிரச்சினையைப் போல் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் இல்லை. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது என்பது அவர்கள் விருப்பம். அதற்கு நாங்கள் எவ்விதத் தடையும் சொல்லவில்லை.
இந்த நாடுகளுக்கு ரஷ்யா, முன்பும் இப்போதும் எவ்விதத்திலும் அச்சுறுத்தலாக இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ரஷ்யாவுக்கு எதிராக அந்த நாடுகளில் ராணுவத் தளமும் கட்டமைப்புமும் அமைக்கப்பட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
"எங்களுக்கு எவ்வாறான அச்சுறுத்தலை அந்த நாடுகள் ஏற்படுத்துகின்றனவோ, அதேபோன்ற அச்சுறுத்தலை ரஷ்யாவும் ஏற்படுத்தும்," என்று ரஷ்ய அதிபர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துர்க்மேனிஸ்தானில் மத்திய ஆசியத் தலைவர்களின் சந்திப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, ரஷ்யாவின் அரசாங்கத் தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில் இவ்வாறு புட்டின் தெரிவித்தார்.
சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவு இதுவரையிலும் எவ்விதப் பிரச்சினையும் இன்றி சுமூகமாகவே இருந்துவந்துள்ளது.
ஆனால் இப்போது, நேட்டோ உறுப்பியத்தால் இந்த நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து பதற்றமான சூழலே உருவாகியுள்ளது என்பதை மறுக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
உக்ரேனில் ரஷ்யா அதன் சிறப்பு ராணுவ நடவடிக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் டோன்பாஸ் வட்டாரத்திற்கு சுதந்திரம் அளிப்பதே மாஸ்கோவின் இலக்கு. அதேவேளையில் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத சூழலையும் மாஸ்கோ ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள் முன்னதாக திட்டமிட்டபடி உக்ரேனில் முன்னேறிச்செல்கிறது. அதேவேளையில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவதற்கான தேவையும் ஏற்படவில்லை என்று கூறினார்.

