மாண்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய தெரிவித்துள்ளது. திரு அபே மீது இந்தியா கொண்டுள்ள மரியாதையை இது காட்டுவதாகக் கருதப்படுகிறது. தாம் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில், இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே உள்ள இருதரப்பு உறவை மேம்படுத்தியவர் திரு அபே. இருதரப்பு உறவுக்கு திரு அபே பெரும் பங்களித்ததாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்தச் சோகத்தை ஜப்பானியர்களுடம் இந்தியர்கள் பகிர்ந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டார். திரு அபேயை தம்முடைய உற்ற நண்பர் என திரு மோடி அடிக்கடி வருணித்துள்ளார். இருநாட்டு தலைவர்களும் கடைசியாக மே 24 அன்று இடம்பெற்ற குவாட் தலைவர்கள் கூட்டத்தில் சந்தித்தனர். திரு அபேயின் மறைவு குறித்து எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் தமது இரங்கலை தெரிவித்துகொண்டார். இருநாடுகளுக்கிடையே உள்ள உறவை வலுப்படுத்த திரு அபே முக்கிய பங்களித்ததாக அவர் டுவிட்டரில் குறிப்பிட்டார். திரு அபேயின் மரணம் தம்முடைய தனிப்பட்ட இழப்பு என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்த நாள் ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும், உலகிற்கும், எனக்கும் சோகமான நாள் என்று அவர் சொன்னார். தாம் பிரதமராக இருந்தபோது, இந்தியாவில் அதிவேக ரயிலை அறிமுகப்படுத்த திரு அபே முயற்சி செய்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு: இந்தியா
1 mins read
மறைந்த திரு அபேவுடன் திரு மோடி அணுக்கமான உறவை கொண்டிருந்தார் (படம்: ஏஃபி) -

