வாஷிங்டன்: டுவிட்டர் சமூக ஊடகத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியுள்ளதைத் தொடர்ந்து அவர்மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்து உள்ளது டுவிட்டர் நிர்வாகம்.
அமெரிக்காவைச் சேர்ந்த, 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க், டுவிட்டர் சமூக வலைத்தளத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக சில வாரங்கள் முன் அறிவித்தார்.
எனினும் டுவிட்டரில் உள்ள போலிக் கணக்குகள் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தால் மட்டுமே டுவிட்டரை வாங்குவேன் என்றும் சில நிபந்தனைகளை அவர் அறிவித்தார்.
இச்சூழலில் போலி கணக்குகள் பற்றிய தகவல்களை டுவிட்டர் வழங்கத் தவறியதால் தமது ஒப்பந்தத்தை நிறுத்துவதாக மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பால் டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் சரியத் தொடங்கியுள்ளன.
இதையடுத்து டுவிட்டர் நிறுவனம் மஸ்க்மீது வழக்குத் தொடரப்போவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னதாக போடப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என்றால் எலான் மஸ்க் ஒரு பில்லியன் டாலர் செலுத்தவேண்டும். இந்த சட்டப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்,'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

