லண்டன்: பிரிட்டனின் பிரபல 'கேம்பிரிட்ஸ்' பல்கலைக் கழகத்தில் சில மாணவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விசாரணையை 'கேம்பிரிட்ஜ்' மேற்கொள்கிறது.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தப் பல்கலைக்கழகத்தில் ஐந்து மாணவர்கள் மாண்டுவிட்டனர். அவர்களில் ஒருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதர நால்வரும் அவ்வாறு செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக பல்கலைக் கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நான்காவது மரணம் கடந்த மே மாதம் இடம்பெற்றது. அதற்குப் பிறகு பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையுடன் இணைந்து விசாரணை மேற்கொள்ள 'கேம்பிரிட்ஜ்', குழு ஒன்றை நியமித்தது.
மாணவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க விசாரணை குறித்து அதிக தகவல் வெளியிடப்படவில்லை. எனினும், அந்த நான்கு மரணங்களுக்கும் தொடர்பிருந்ததாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த விசாரணை தொடங்கிய பிறகு சென்ற மாதம் மேலும் ஒரு மாணவர் மரணமடைந்தார். கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலால் மனநலப் பிரச்சினைகள் வரலாறு காணாத அளவில் எழுந்துள்ளன. அதனால் மாணவர்களின் மரணத்திற்கான காரணங்களை அறிவது சிரமம் எனச் சொல்லப்படுகிறது.

