இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ளர்.
எனினும் ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எண்ணி இலங்கையைவிட்டே தப்பி ஓட முடிவு செய்தார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் அவருக்கு அடைக்கலம் தர அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வரவில்லை.
கோத்தபாயவின் தம்பி பசில் ராஜபக்சே, விமான நிலையத்தில் இருந்து மக்களால் துரத்தப்பட்டார்.
இதனால் இன்று அதிகாலை ஒருவழியாக தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படை விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக அறியப்படுகிறது.
மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான நஷீத், கோத்தபாயவை தமது வாகனத்தில் அழைத்துச் சென்றார். இலங்கையைவிட்டு கோத்தபாய தப்பி ஓடிவிட்டதை இலங்கை விமானப் படை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளன.
இதனிடையே ராஜபக்சேவுக்கு அகதியாக பாதுகாப்பு வழங்கக் கூடாது என்கிற எதிர்ப்பு குரல்கள் மாலத்தீவில் வலுத்துள்ளன. இலங்கை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ராஜபக்சேவை மாலத்தீவை விட்டே வெளியேற்ற வேண்டும்; மாலத்தீவு- இலங்கை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மாலத்தீவு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

