கோலாலம்பூர்: தன்னாட்டு மக்களை வேலைக்காக மலேசியா அனுப்புவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்தோனீசியா தெரிவித்துள்ளது. எனவே, மலேசியாவின் தோட்டத்துறைக்கு ஏற்கெனவே நியமனம் பெற்றிருந்த ஆயிரக்கணக்கான இந்தோனீசியர்களும் அங்கு செல்லமுடியாது.
ஆள்சேர்ப்பு ஒப்பந்தத்தில் நடந்த விதிமீறல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்தோனீசியா சொன்னது.
செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான மலேசியாவில் ஏற்கெனவே ஆள் பற்றாக்குறை நிலவும் வேளையில் இந்தோனீசியாவின் இந்த முடிவு அதற்குப் பலத்த அடியாக இருக்கும் என்றும் அதன் பொருளியல் மீட்சி பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மலேசியாவில் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஊழியர்களுக்குப் பற்றாக்குறை உள்ளது.
"இல்லப் பணியாளர்களுக்கான இணைய வழி ஆள்சேர்ப்பு முறையை மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் தொடர்ந்து பயன்படுத்தினர். அது ஆள்கடத்தல், கட்டாய பணி போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது," என்று மலேசியாவுக்கான இந்தோனீசியத் தூதர் ஹெர்மோனோ ராய்ட்டர்சிடம் சொன்னார்.
இந்தோனீசியப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சென்ற ஏப்ரல் மாதம் மலேசியா-இந்தோனீசியா இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அது மீறியதாகும் என்றும் அவர் சொன்னார்.
மலேசிய மனிதவள அமைச்சர் சரவணனும் இந்தோனீசியாவின் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார்.
வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதற்காக மலேசிய நிறுவனங்கள் கிட்டத்தட்ட 20,000 விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன. அவற்றில் பாதி தோட்டத்துறைக்கானது.

