டெல் அவிவ்: அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவை விரிவபடுத்த கூட்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலின் தற்காலிகப் பிரதமர் யாயர் லப்பிட்டும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மத்திய கிழக்கின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்த ஈரான் எடுக்கும் முயற்சிகளை முறியடிப்பது இந்த ஏற்பாட்டின் இலக்குகளில் ஒன்று. ஈரானை என்றுமே அணுவாயுதங்களை வைத்திருக்காமல் பார்த்துக்கொள்வதற்கான குறிப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பைடன் தரப்பு அதிகாரி ஒருவர் கூறினார்.
பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரானைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு திரு பைடன் மீது நெருக்குதல் இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து தற்காப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், தேசிய அளவில் தனது ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி ஈரானை அணுவாயுதங்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க அமெரிக்கா தயாராய் இருப்பதாகத் திரு பைடன் குறிப்பிட்டார்.
இஸ்ரேலுக்குத் தாம் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின் இரண்டாம் நாளான நேற்று அவர் திரு லிப்பிட்டுடன் இணைந்து இந்த வாக்குறுதியை அளித்தார்.
ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை ஆகப் பெரிய மிரட்டலாக இஸ்ரேல் கருதுகிறது.
தமது மத்திய கிழக்குப் பயணத்தின் அடுத்த அங்கமாக திரு பைடன் இன்று சவூதி அரேபியா செல்லவிருக்கிறார். அவர், இஸ்ரேலிலிருந்து நேரடியாக சவூதி அரேபியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் அமெரிக்க அதிபர்.

