சிங்கப்பூர் பொதுவிருது பூப்பந்து: அரையிறுதியில் இந்தியாவின் சிந்து
சிங்கப்பூர்: சிங்கப்பூர் பொதுவிருது பூப்பந்துப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் ஹான் யூவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் சுற்றை துய் ஹான் யூ கைப்பற்றினார். பின்னர் சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த இரண்டு சுற்றுகளைக் கைப்பற்றினார். இதனால் 17-21, 21-11, 21-19. என்ற ஆட்டக் கணக்கில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் பிரனோய், வீராங்கனை சாய்னா நேவால் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினர்.
20 ஓவர் கிரிக்கெட்: ஹாங்காங்கிடம் சிங்கப்பூர் தோல்வி
புலவாயோ: 20 ஓவர் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி பெற முடியாமல் வெளியேறிய சிங்கப்பூர் அணி, நேற்று ஐந்தாவது இடத்திற்கான அரையிறுதி
பிளே-ஆஃப் சுற்றில் விளையாடியது. இதில் ஹாங்காங்கை எதிர்கொண்டது சிங்கப்பூர்.
ஸிம்பாப்வேயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பந்தடித்த சிங்கப்பூர் அணி 146 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் விளையாடிய ஹாங்காங் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து, ஏழு பந்து எஞ்சியிருக்க, 147 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஹாங்காங்.
தோக்கியோவில் 2025ஆம் ஆண்டு திடல்தட போட்டிகள்
சிங்கப்பூர்: 2025ஆம் ஆண்டிற்கான உலக திடல்தட சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானின் தோக்கியோ நகரில் நடைபெறும் என்று திடல்தட ஆணையம் அறிவித்துள்ளது.
இப்போட்டியை நடத்துவதற்கு சிங்கப்பூர், போலந்து, கென்யா ஆகிய நாடுகளும் விருப்பம் தெரிவித்திருந்தன. அவற்றில், சிங்கப்பூரும் தோக்கியோவும் முன்னிலையில் இருப்பதாக சென்ற மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
அனைத்துலகப் போட்டிகளை சிங்கப்பூரில் நடத்துவதற்கு தாங்கள் தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாக சிங்கப்பூரின் ஸ்போர்ட்எஸ்ஜி கூறியது.
போட்டியை நடத்த முன்வந்த அனைத்து நாடுகளும் வலுவானதாகவும் அனுபவமிக்கதாகவும் இருந்தாலும் நான்கு முக்கிய பிரிவுகளிலும் தோக்கியோ முன்னிலையில் இருந்ததாக ஆணையம் சொன்னது. 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகளை ஹங்கேரி நடத்தவுள்ளது.

