மணிலா: பிலிப்பீன்ஸ் நகராட்சி ஒன்றின் ஊழியர்கள் பொதுமக்களிடம் முகம் சுளிக்காமல் இன்முகத்தோடும் புன்னகையோடும் சேவை செய்யவேண்டும் என்று அந்நாட்டின் மேயர் ஒருவர் சட்ட ஆணை பிறப்பித்துள்ளார்.
புன்னகைத்தப்படி வேலை செய்யாத ஊழியர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது அவர்களுடைய ஆண்டு மதிப்பாய்வைப் பாதிக்கும் என்றும் அந்த ஆணை கூறுகிறது.
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வடக்கு பிலிப்பீன்சில் உள்ள முலானே நகரத்தின் மேயராக பொறுப்பேற்றுள்ள அரிஸ்டோட்டல் அக்வாயர், இந்த ஆணையை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது அவர் இதை வாக்குறுதியாகவே அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"நகராட்சி ஊழியர்கள் இனி முகம் சுளிக்கக்கூடாது," என்று அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அரசாங்க ஊழியர்கள் முகம்சுளிப்பது குறித்து பொதுமக்களிடம் அதிருப்தி நிலவியதாக அவர் சொன்னார்.
இந்த ஆணையை முலானே நகர மக்கள் வரவேற்றுள்ளனர். இதுபற்றி நகராட்சி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.
இருப்பினும், இதற்கு சற்று எதிர்ப்பு இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக மேயர் அக்வாயர் கூறினார்.

