ஷா ஆலம்: மலேசியாவின் பிகேஆர் கட்சியில் உள்கட்சி பூசலை ஏற்படுத்தும் தலைவர், மலேசிய பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார். மலேசியாவில் பொதுத் தேர்தல் இன்னும் ஓராண்டுக்குள் நடத்தப்பட இருக்கிறது.
பிகேஆர் கட்சியின் வருடாந்திர தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் நேற்று பேசிய திரு அன்வார், "கட்சியில் பிளவை ஏற்படுத்தும் எவராக இருந்தாலும், அவரை நான் மன்னிக்க மாட்டேன்.
பிளவை ஏற்படுத்துவதிலே அவர்கள் குறியாக இருந்தால், பொதுத் தேர்தலில் அவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட மாட்டார்கள்," என்று உறுதிபடக் கூறினார்.
கடந்த மே மாதம் நடந்த பிகேஆர் கட்சித் தேர்தலில் திரு அன்வார் போட்டியின்றி மீண்டும் அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
திரு அன்வாரும் அவர் தலைமை தாங்கும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியும் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து பரவலாக தொடர்ந்து ஒத்துழைப்பை நாட வேண்டுமா என்பது குறித்து பிகேஆர் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
இந்நிலையில், "நான்தான் பிகேஆர் கட்சித் தலைவர், பக்கத்தான் ஹரப்பான் கூட்டணித் தலைவர். அதேவேளையில், மலேசிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் நானே," என்று திரு அன்வார் கூட்டத்தில் நினைவுபடுத்தினார்.
மலேசியாவின் 15வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணி வாகை சூடுவதைத் தடுக்க திரு அன்வார் திட்டம் தீட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர், இந்த ஆண்டு மார்ச் மாதங்களில் நடந்து முடிந்த மலாக்கா, ஜோகூர் சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய முன்னணிக் கூட்டணி பெரும்பான்மை வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

