ஜெட்டா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவூதி அரேபியாவில் உள்ள அரபு நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது வட்டார ஏவுகணை, தற்காப்பு ஆற்றல்கள் குறித்து கலந்தாலோசிப்பார் என்று பைடன் நிர்வாகத்தின் மூத்த தலைவர் ஒருவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபின் மத்திய கிழக்கிற்கு முதன்முறையாக அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் பைடன், ஆறு வளைகுடா நாடுகள் மற்றும் எகிப்து, ஜோர்தான், ஈராக் ஆகிய நாடுகளுடன் திட்டமிடப்பட்டு இருந்த உச்சநிலை மாநாடு ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்த அதிபர் பைடன், அதிருப்தி செய்தியாளர் ஜமால் காஷோகி 2018ல் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரு தலைவர்களும் மேற்கொண்ட இந்தச் சந்திப்பு, அமெரிக்காவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முயற்சி எடுக்கப்படுவதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இவர்களுடைய இந்தச் சந்திப்பு, மனித உரிமை மீறல் குறித்து அமெரிக்காவில் விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, மத்திய கிழக்கிற்கும் வட ஆப்பிரிக்காவுக்கும் குறுகியகால, நீண்டகால உணவுப் பாதுகாப்பு உதவி வழங்குவதன் தொடர்பில் அமெரிக்கா US$1 பில்லியன் (S$1.4 பி.) கடப்பாடு கொண்டுள்ளது என்று அதிபர் பைடன் அறிவிப்பார் என மற்றொரு மூத்த நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.


