வாஷிங்டன்: வரும் வாரங்களில் குரங்கம்மை தொற்று அதிகரிக்கும் என்பதை எதிர்பார்க்கும் அமெரிக்காவிடம் தற்போது போதுமான அளவு தடுப்பூசிகள் இல்லை என்று உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் குரங்கம்மை தொற்று பரவும் மையப்பகுதியாக நியூயார்க் உருவெடுத்துள்ளது. ஜூலை 14ஆம் தேதி நிலவரப்படி, அங்கு கிட்டத்தட்ட 390 பேரிடம் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் இதுவரை 1,470 பேரிடம் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் அமெரிக்காவில் குரங்கம்மை தொற்று பரவல் தொடங்கியபோது, ஏறக்குறைய 2,000 தடுப்பூசி அளவு மட்டுமே கையிருப்பில் இருந்தது.
பின்னர் நாடு முழுவதும் 156,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி அளவு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தேசிய கையிருப்பில் 130,000க்கும் மேற்பட்ட தடுப்பூசி அளவு சேர்க்கப்பட்டுள்ளது. நாளை அவை விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த சுற்று தடுப்பூசி விநியோகம், குரங்கம்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கவனம் செலுத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.