இலங்கையில் ஆர்ப்பாட்டம் இன்று 100வது நாளை எட்டியது. கடந்த மூன்றரை மாதங்களாக நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக நாட்டின் முன்னாள் அதிபர் பதவி விலகினார். இப்போது இடைக்கால அதிபரும் பதவி விலக கோரி ஆர்ப்பாட்டங்கள் சூடுபிடித்துள்ளன.
சென்ற வாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிடுவதற்கு முன், திரு கோத்தபாய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். தற்போது சிங்கப்பூரில் உள்ள அவர், சில தினங்களுக்கு முன் பதவி விலகினார்.
நாட்டில் உணவு, மருந்து, எரிபொருள் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. திரு ராஜபக்சேயின் மோசமான நிர்வாகமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை பதவியிலிருந்து விலக கோரி சமூகத் தளங்களில் பலத்த குரல்கள் எழுந்தன.
சிறுபான்மை தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் பெரும்பான்மையான சிங்கள மக்களுடன் ஆர்ப்பாட்டங்களில் இணைந்துகொண்டனர். ராஜபக்சே குடும்பமே அரசியலைவிட்டு வெளியேற வேண்டும் என்று ஒன்றுபட்ட குரலில் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திரு ராஜபக்சே பதவி விலகியதிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் பிரதமரும் இடைக்கால அதிபருமான ரணில் விக்ரமசிங்க பதவி விலகவேண்டும் என்பது ஆர்ப்பாட்டக்காரர்களின் புதிய கோரிக்கை.