இலங்கையில் என்றுமில்லாத அளவுக்கு உணவு விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் பல இலங்கை மக்கள் ஒருவேளை சாப்பாடுகூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ஜூன் மாதம் உணவு விலை 80 விழுக்காட்டை எட்டியது. ஒரு கிலோ பூசணிக்காய் 1,000 ரூபாய்க்கு ($3.90) விற்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன் அதன் விலை 500 ரூபாயாக இருந்தது. விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் பலர் வெறும் 100 கிராம் காய்கறிகளை மட்டுமே வாங்குவதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
ரொட்டியின் விலைகூட கட்டுப்படியாக இல்லையென பலர் புலம்புகின்றனர். பல நடுத்தர, குறைந்த வருமானக் குடும்பங்கள் ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகின்றனர்.
உணவு விலை ஒவ்வொரு நாளும் ஏறிக்கொண்டே போகிறது. போதிய உணவு இருந்தாலும், அவற்றை விநியோகிக்க பெட்ரோல் இல்லை.
இலங்கையில் சுமார் ஐந்து மில்லியன் மக்களுக்கு உணவு உதவி தேவைப்படுவதாக உலக உணவு அமைப்பு கூறியது.
இந்நிலையில் சொந்தமாக காய்கறிகள் வளர்ப்பதே பசிக்கு தீர்வாகும் என்று களத்தில் மக்கள் இறங்கி உள்ளனர். முன்னாள் அதிபர் அலுவலகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரங்கள் அமைத்து வேலை பார்த்து வருகின்றனர். இந்தக் கூடாரங்களுக்கு வெளியே பல வகையான காய்கறிகளை வளர்க்க ஒருவருக்கு ஒருவர் உதவி வருகின்றனர்.