நியூயார்க்: அமெரிக்காவில் குரங்கம்மை சம்பவங்கள் அதிகமாக பதிவாகும் நியூயார்க் நகரில், மக்கள் அதிக ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்தனர்.
இந்த தடுப்பூசிக்காக கிட்டத்தட்ட 9,200 முன்பதிவுகள் வெள்ளிக்கிழமையன்று திறக்கப்பட்டன. அவை அனைத்தும் ஏழு நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. மூன்று நாள்களுக்கு முன்பு அதிகமானோர் அந்த இணையப்பக்கத்தை மொய்த்ததால் அது சீர்குலைந்தது.
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று ப்ரூக்ளின் நகர பள்ளியொன்றில் அவர்கள் வரிசை கட்டி நின்றனர். பெரும்பாலானவர்கள் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் என்று கூறப்படுகிறது.
தடுப்பூசிக்கான முன்பதிவு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாக அவர்களில் பலர் கூறினர்.
நியூயார்க் நகரில் சென்ற திங்கட்கிழமையன்று 223ஆக இருந்த குரங்கம்மை சம்பவங்கள், வெள்ளிக்கிழமையன்று 461 ஆனது.
அமெரிக்காவில் மே மாதம் முதல் குரங்கம்மை சம்பவம் கண்டறியப்பட்டது.