பிரிட்டிஷ் பிரதமருக்கான மூன்றாவது சுற்று வாக்கெடுப்பு
லண்டன்: பிரிட்டனின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று வாக்குப்பதிவிலும் முன்னாள் நிதி அமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், அவருக்கு ஆதரவாக 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி மார்டன்ட் 82 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.
வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் 71 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். கெமி படேனோக் 58 வாக்குகள் பெற்றுள்ளார்.
31 வாக்குகளுடன் கடைசி இடம் பெற்ற வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழுத் தலைவர் டாம் டுகென்தாட் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இறுதி இரு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பர்.
இறுதிச் சுற்றில் கன்சர்வேட்டிவ் கட்சியின் கிட்டத்தட்ட 1.60 லட்சம் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிப்பர்.
அதில் வெற்றி பெற்று, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பெயா் வரும் செப்டம்பா் மாதம் 5ம் தேதி அறிவிக்கப்படும்.
இந்நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளுக்கான போட்டி கடுமையாகவும் பரபரப்புமிக்கதாகவும் இருக்கும்.
பிரதமராகும் வாய்ப்பு பென்னி மார்டன்டுக்கு அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், முந்திய சுற்றைவிட அவருக்கு ஒரு வாக்கு குறைந்துள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள அமைச்சர் டிரஸ் முன்பைவிட 9 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். எனவே, அடுத்தத்தடுத்த சுற்று களிலும் அவருக்கு ஆதரவு அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

