மெல்பர்ன்: ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மொடர்னா, ஸ்பைவேக்ஸ் கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கு ஆஸ்திரேலியா மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக மொடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்தது.
கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறு பிள்ளைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எளிதில் பரவக்கூடிய ஓமிக்ரானின் புதிய துணை திரிபுகளான பிஏ.4, பிஏ.5 ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மில்லியன்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உட்புற இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது.
எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.
மலேசியா
இதற்கிடையே, மலேசியாவிலும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. கடந்த இரண்டு வாரங்களில், இந்த எண்ணிக்கை 51 விழுக்காடு அதிகரித்தது.
அத்துடன் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசாங்கம் வலியுறுத்தியது.
அமெரிக்கா
புதிய திரிபுகள் அமெரிக்காவிலும் புதிய தொற்று அலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் 20% அதிகரித்துள்ளது.
சிகாகோவில் கிருமிப் பரவலுக்கான உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் கட்டுப்பாடுகள் எதுவும் கொண்டுவரப்படவில்லை.
சீனாவில் அன்றாட தொற்றுச் சம்பவங்கள் 700 ஆனது. கிருமித்தொற்று பரிசோதனை ஷாங்காய் நகரம் முழுவதிற்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அங்கு 23 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

