ஹாங்காங்: மக்காவ் நகரில் வரும் 23ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 12 நாள்களுக்கு அங்கு சூதாட்டக் கூடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வர்த்தகங்கள் முடக்கப்பட்டிருந்தன.
அங்கு தொற்றுச் சம்பவங்கள் குறைந்துள்ளதைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையன்று அங்கு 10 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்தியாவசிய வர்த்தகங்கள் உள்ளிட்ட சில பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் செயல்படும் என்று கூறிய அரசாங்க அறிவிப்பில், சூதாட்டக் கூடங்கள் திறக்கப்படுமா, இல்லையா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும், வரும் சனிக்கிழமை முதல் சூதாட்டக் கூடங்கள் மீண்டும் செயல்பட தொடங்கும் என்று அதுபற்றி தகவலறிந்த வட்டாரம் கூறுகிறது. ஆனால், திரையரங்குகள், உடற்பயிற்சிக்கூடங்கள், அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

