தெஹ்ரான்: ரஷ்யாவை உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஈரானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரேன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு புட்டினின் முதல் வெளிநாட்டுப் பயணமாகும் இது.
இப்பயணத்தின்போது புட்டின் ஈரானின் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி காமேனியைச் சந்தித்தார். அப்போது அவர், புட்டினின் படையெடுப்பிற்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கு, உக்ரேன்மீது படையெடுப்பதைத் தவிர ரஷ்யாவிற்கு வேறு எந்த வழியையும் விட்டுவைக்கவில்லை என்ற புட்டினின் கூற்றை காமேனி மீண்டும் சொன்னார்.
"போர் என்பது கடினமான சூழல். போரால் மக்கள் சிரமப் படுவதில் விருப்பமில்லை.
"ஆனால், உக்ரேன் விவகாரத்தில், நீங்கள் படையெடுக்கவில்லை என்றால், எதிர்தரப்பு அதைத் செய்திருக்கும்," என்று அவர் புட்டினிடம் சொன்னார்.
போர் பற்றிய காமேனியின் இந்தப் பகிரங்கப் பேச்சு, ரஷ்யாவின் மற்றொரு கூட்டாளியான சீனாவின் ஆதரவைவிட வலுவானதாகப் பார்க்கப்படுகிறது.
மாஸ்கோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான நீண்டகாலமான உறவு, மேலும் வலுப்பெறுவதற்கான அறிகுறியாகவும் இருந்தது காமேனியின் பேச்சு.
இந்தப் பயணத்தின்போது, துருக்கி அதிபர் எர்டோகனையும் புட்டின் சந்தித்தார். மூவரும் உக்ரேன் போர், சிரியாவின் நிலைமை குறித்து விவாதித்தனர்.
துருக்கியின் வடகிழக்கில் புதிய ராணுவ ஊடுருவல் அச்சுறுத்தல் குறித்தும் பேசப்பட்டது.
ஈரானிடம் இருந்து ஆளில்லா வானூர்தியை வாங்க ரஷ்யா திட்டமிடுவதாகவும் ஆனால், இச்சந்திப் பின்போது அதுபற்றி வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்கிறது அமெரிக்கா.

