இங்கிலாந்து: கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருக்கும் இங்கிலாந்தின் பிரதமருக்குமான போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவருடன் லிஸ் ட்ரஸ் இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் அண்மையில் விலகியதிலிருந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க ஆளும் பழமைவாத கட்சி (கன்சர்வேடிவ்) மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாளி எம்.பி.க்களான ரிஷி சுனக், சூவெல்லா பிரேவர்மன் மற்றும் அமைச்சர்கள் லிஸ் டிரஸ், பென்னி மார்டன்ட் உட்பட 8 பேர் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, பல சுற்றுகளாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து போட்டியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
அந்த வகையில், 8 எம்.பி.கள் வேட்பாளர்களாக களமிறங்கிய நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது.
3 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் கடைசியாக நடந்த வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்ற பென்னி மார்டன்ட் போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்தின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

