தோஹா: கத்தார் நாட்டில் சில ஆடவர்கள் ஒன்றுசேர்ந்து
29 நாய்களைச் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்நாட்டின் தலைநகர் தோஹா அருகேயுள்ள தொழிற்சாலை வளாகம் ஒன்றினுள் நால்வர் நுழைந்தனர். அவர்களில் இருவர் வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தனர்.
அப்போது தங்களைத் தடுத்த பாதுகாவலர்களைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, உள்ளே சென்ற அவர்கள் சரமாரியாக நாய்களைச் சுட்டுத் தள்ளினர்.
இதனால் குட்டிநாய்கள் உட்பட மொத்தம் 29 நாய்கள் பரிதாபமாக இறந்தன. சில நாய்கள் குண்டு பாய்ந்து காயமடைந்தன.
சென்ற 10ஆம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து, அண்மையில்தான் தகவல்கள் வெளியானது.
தமது மகனை நாய் ஒன்று கடித்துவிட்டதால் அவற்றைச் சுட்டுக்கொன்றதாக அந்த கும்பலில் ஒருவன் சொன்னதாக பாதுகாவலர் களில் ஒருவர் கூறினார்.
நாய்களைச் சுட்டுக்கொன்றவர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

