லண்டன்: தமது போட்டி வேட்பாளரும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சருமான லிஸ் டிரஸை கட்சித் தலைவராகவும் அடுத்த பிரதமராகவும் தேர்ந்தெடுத்தால், அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியடையக்கூடும் என்று சக போட்டியாளரும் முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட எட்டுப் பேரில், முதல் சுற்றில் இருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார் ரிஷி சுனக்.
ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த ஐந்துச் சுற்றுகளிலும் மற்ற வேட்பாளர்களை ஓரங்கட்டி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு, டிரஸ் இரண்டாம் இடம் பிடித்தார்.
கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ள இறுதிக்கட்ட வாக்கெடுப்பிலும் டிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தலைமைப் பதவிக்கு டிரஸைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாக அண்மைய கருத்துக்கணிப்பு ஒன்று கூறுகிறது.
போரிஸ் ஜான்சனின் ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகக் கூறப்படும் சுனக்கின் பதவி விலகல் காரணமாக, கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் அவரை 'நம்பமுடியாது' என கூறுவதாகவும் அக்கணிப்பு சொன்னது.
தமது பிரசாரத்தில் வரி குறைப்பு பற்றி எதுவும் கூறமால், டிரஸைத் தாக்கிப் பேசுவதும் அவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியுள்ளது.
"அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், அதற்கு சரியான ஆள் நான்தான்," என்றார் சுனக்.
வரிக் குறைப்பை முன்வைத்து முந்திய சுற்றுகளில் முன்னேற்றம் கண்ட டிரஸ், தொடர்ந்து சுனக்கின் வரிக் கொள்கைகளைச் சாடினார்.
வரிக் குறைப்பால் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 30 பில்லியன் பவுண்டு ($50 பில்லியன் வெள்ளி) செலவாகும் என்ற டிரஸ், அது சமாளிக்கக்கூடிய ஒன்றுதான் என்றார்.
சுனக்கோ, அது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பணவீக்க உயர்வுக்கு வழிவகுக்கும் என்கிறார்.
இதையடுத்து, அடுத்த ஆறு வாரத்திற்கு நடைபெறவுள்ள பிரசாரம் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 2024ஆம் ஆண்டின் இறுதியில் பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

