அமெரிக்காவில் முதன்முறையாக இளம் பிள்ளைகளுக்கு குரங்கம்மை கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஒரு சிறுவருக்கும், மற்றொரு குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. குழந்தை அமெரிக்கவாசி அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நலமாக இருப்பதாகக் கூறப்பட்டது. இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருக்கும் மற்றவர்களிடமிருந்து குழந்தைகளுக்கு தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் தோன்றிய குரங்கம்மை நோய் தற்போது சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி உள்ளது.
உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14,000க்கும் மேல் ஆகிவிட்டது என்றும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை நோய் தொற்றை சுகாதார அவசரநிலையாக அறிவிக்க வேண்டுமா என்று அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.