குளிர்ப் பிரதேசமான வட ரஷ்யாவில் பனிக்கரடிகளைப் பார்ப்பது ஒரு சாதாரண காட்சி. ஆனால் அண்மையில் அங்கு வாழும் ஒரு பனிக்கரடிக்கு நேர்ந்த விபரீதம் முன் எப்போதும் நடந்ததில்லை என்று அந்த வட்டாரவாசிகள் கூறுகின்றனர்.
பெண் பனிக்கரடி ஒன்று அதன் நாக்கில் ஒரு பால் டின் சிக்கிக்கொண்டு தவியாய் தவித்தது. அந்தக் கரடி வீடுகள் இருக்கும் இடம்வரை வந்துவிட்டதாகக் கூறப்பட்டது.
கரடியைக் காப்பாற்ற மாஸ்கோ விலங்குத் தோட்டத்திலிருந்து ஒரு குழு புறப்பட்டு வந்தது. கரடிக்கு மயக்கமருந்து செலுத்தப்பட்டு, பின்னர் அதன் வாயில் மாட்டிக்கொண்டிருந்த பால் டின் அகற்றப்பட்டது. அதன் நாக்கில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பால் டின் வாயில் சிக்கிக்கொண்டதால், கரடி பல நாள்கள் சாப்பிடாமல் இருந்ததாக நம்பப்படுகிறது. அது மிகவும் மெலிந்து காணப்பட்டதாக விலங்கு மருத்துவர்கள் கூறினர்.
பருவநிலை மாற்றத்தால் பனிக்கரடிகள் வாழும் குளிர்ப் பிரதேசங்கள் அழிந்துவருகின்றன. இதனால் அவற்றுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவை மக்கள் விட்டுச்செல்லும் குப்பை மேடுகளில் உணவு தேடுகின்றன. அவ்வாறு செய்யும்போது, இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுகின்றன.

