கோப்பன்ஹேகன்: உலகையே வறுத்தெடுக்கும் அனல்காற்றுக்கு ஸ்பெயின், போர்ச்சுகலில் மட்டும் 1,700க்கும் மேற்பட்டவர்கள் மாண்டுவிட்டதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
"கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, அனல்காற்றும் அதன் காரணமாக காட்டுத்தீச்சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவற்றின் காரணமாக ஆயிரக்கணக்கானோர் மாண்டுவிட்டனர்.
இந்த ஆண்டு, ஸ்பெயின், போர்ச்சுகலில் மட்டும் இதுவரை 1,700 பேர் மாண்டுவிட்டனர்," என்றார் உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய இயக்குநர் கூளுக்.
வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் சொன்னார்.
பாரிஸ் பருவ நிலை ஒப்பந்தத்தைச் செயல்படுத்த நாடுகள் முனைப்பு காட்டவேண்டும் என்றார் அவர்.
அதீத வெப்பநிலை காரணமாக, லண்டனின் லுட்டான் விமான நிலையத்தின் ஓடுபாதை உருகிவிட்டது. சென்ற திங்கட்கிழமையன்று நடந்த இச்சம்பவம் பருவநிலை மாற்றத்தைத் தாக்குப்பிடிக்கும் நாடுகள் தங்கள் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்காவில் 10 ஆண்டு காணாத வெப்பநிலை
இதற்கிடையே, அமெரிக்காவின் வடகிழக்கு மற்றும் நியூயார்க் பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மன்ஹாட்டன் சென்ட்ரல் பூங்காவில் இதுவரையில்லாத அளவுக்கு இன்று 37 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டி வதைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அங்கு சென்ற 2012ஆம் ஆண்டு இதே வெப்பநிலை இருந்தது.
இப்பகுதியில், 1936ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதியன்று ஆக அதிகமாக 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
நியூயார்க்கில் வெப்பநிலை
32 டிகிரி செல்சியசைத் தாண்டும் என்று முன்னுரைக்கப்பட்டு
உள்ளது.
வேகமாக உருகும் பனிப்பாறைகள்; சீனாவில் வெள்ள அபாயம்
தொடர்ந்து நீடிக்கும் அனல்காற்று காரணமாக, பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், சீனாவில் வெள்ளம், மண்சரிவு ஏற்படும் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஜூன் மாதம் முதல் சீனாவின் பல பகுதிகளிலும் தொடர்ந்து வெயில் சுட்டெரிக்கிறது.
"தெற்கு, கிழக்குப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக மோசமான வெப்பநிலை நிலவுவதால், பனிப்பாறைகள் வேகமாக உருகுகின்றன.
"அது, பல இடங்களில் திடீர் வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்துகிறது," என்றார் ஜின்ஜியாங் வானிலை மைய அதிகாரி சென் சுன்யான் சொன்னார்.
ஜின்ஜியாங் மலைப்பகுதிகளில் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதால், கிர்கிஸ்தானுடனான சீன எல்லையில் உள்ள அக்சு ஆற்றின் கிளை நதியில் உள்ள அணைகள் உடையும் அபாயம் இருப்பதாக சீன வானிலை மையம் முன்னுரைத்தது.

