கியவ்: உக்ரேனில் தொடரும் போரால் முன்கள மருத்துவ உதவியாளர்களும் மருத்துவமனைகளில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததற்குப் பிறகு 18 மருத்துவ உதவியாளர்கள் உயிரிழந்ததாகவும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அமைச்சு தெரிவித்தது.
மேலும், மருத்துவச் சேவைகளை வழங்கும் 123 நிலையங்கள் ரஷ்யத் தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த 746 நிலையங்களை சரிசெய்யவேண்டிய நிலை உருவெடுத்துள்ளது.
உக்ரேனின் மருத்துவக் கட்டமைப்பை அழிக்கும் நோக்குடன் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சு ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
ஆறாவது மாதம் வரை நீடித்துவரும் போரில் பொதுமக்கள் இருக்கும் பகுதிகளைத் தாக்க ரஷ்யா தயங்கியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ராணுவ ரீதியான தாக்குதல்களையே தாங்கள் மேற்கொண்டுள்ளதாக மாஸ்கோ கூறி வருகிறது.
இதற்கிடையே, உக்ரேனின் ஆயுதப் படையைச் சேர்ந்த 92 பேர் மீது மாஸ்கோ வழக்கு தொடர்ந்துள்ளதாக ரஷ்யாவின் விசாரணைக் குழுத் தலைவர் அலெக்சாண்டர் பாஸ்ட்ரிக்கின் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீது மனிதாபிமான அடிப்படையில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மனிதர்களின் பாதுகாப்பிற்கும் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக திரு பாஸ்ட்ரிக்கின் சொன்னார்.
உக்ரேன் போரால் பெரும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் மருத்துவ ஊழியர்கள்

