லண்டன்: சம்பளப் பிரச்சினை காரணமாக பிரிட்டிஷ் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், அங்கு ரயில் போக்குவரத்து நேற்று பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த 24 மணி நேர வேலைநிறுத்தத்தில், கிட்டத்தட்ட 40,000 பேர் கலந்துகொண்டனர். இதனால், பிரிட்டனில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே ரயில் சேவைகள் செயல்பட்டன. சில பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அத்தியாவசியப் பயணங்களை மட்டுமே மேற்கொள்ளுமாறு மக்களிடம் ரயில்வே துறை கேட்டுக்கொண்டது.
"ஊதிய உயர்வு, வேலை பாதுகாப்பு, நல்ல வேலைச் சூழல் ஆகியவற்றுக்காகப் போராடுவதில் ஊழியர்கள் உறுதியாக உள்ளனர்," என்று ஊழியர் சங்கம் ஒன்றின் பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச் தெரிவித்தார். ஊதிய உயர்வு குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை என்றார் அவர்.
நான்கு விழுக்காடு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்றும் அதன் பிறகு மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மேலும் நான்கு விழுக்காடு உயர்வு அளிக்கப்படும் என்றும் முந்திய பேச்சுவார்த்தையில் கூறப்பட்டிருந்தது.
ஜூன் மாதத்தில் இதேபோன்ற வேலைநிறுத்தம் காரணமாக, மூன்று நாள்கள், ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
பிரிட்டனில் விலைவாசி 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இவ்வாண்டின் இறுதியில் அது இரட்டை இலக்கத்தை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.

